ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அழவைச்சுப் பார்த்தேன், அழகு!

பின்னலிட்டால் அழகு பேச்சினிலே ஓரழகு
கன்னந்தொட்டு போகும் கார்குழலில் ஓரழகு
என்ன என்று தேடி ஏமாறும் முகம் அழகு
சின்னவளைப் போல சிரிப்பாள், சிலையழகு!

வன்ன இடை அழகு வளைவழகு நெளிவழகு
கன்னி அவள் கதையோ கள்ளமில்லா ஓரழகு
தின்னச் சொல்லும் சிலதிருக்கு அது அழகு!
பெண்ணவளின் கனிவாய் பேரழகு பேரழகு!

வேலை மிகவுண்டு விளைவாலே வரமாட்டன்
நாளை சந்திப்போம், நான் சொன்னேன் - சாலமிட்டு
கண்ணீர் வரவழைத்து கசக்கினாள் விழிரண்டும்
அன்னே, அதுவும் அழகே!!!!

14.08 2010

புதன், 26 மே, 2010

வீதியோட்டம்.

உவர் குண்டனுக்கு உதெல்லாம் ஏலாது எண்ட கதைதான் என்னையும் உசுப்பேற்றி விட்டது. பின்னை என்ன! எந்த நேரம் பார்த்தாலும் உவையளுக்கு ஒரு நக்கல்!

சபாபதியர் என்ன பாவம் செய்தாரோ தெரியாது. அவர் பாவம் செத்துப் போனார். அவருக்கு எங்கடை முகமோ அல்லது எங்களுக்கு அவரின்ரா முகமோ தெரியாது. முகந்தெரிஞசுதான் நன்மை தீமை செய்ய வேணுமே என்ன! பாவம் எங்கடை முழு வகுப்பிலுமே சபாபதி ஹவுசுக்கு தெரிபட்ட ஆக்களை நீங்கள் பாத்தியள் எண்டா எப்பவோ செத்துப்போன அவருக்காக கண்ணீர் விட்டிருப்பியள். அல்லது அவர் உயிரோடை இருந்திருந்தா அவர் செத்துப்போயிருப்பார்!!!!

நான் ஸ்கந்து பூஸ்டர் எண்டுவடிகட்டி எடுத்த பிள்ளையளை வைச்சு கொண்டு ( எங்கடை பள்ளிக்கூடமே வடிகட்டித்தான்பிள்ளையளை எடுக்கிறது. ஆனா வடியிலைமிஞ்சி இருக்கிற சக்கையளா நாங்கள் இருந்ததுக்கு நான் என்ன செய்யுறதுஃ??!!!) எபபிடி இவண்டுகள் நடத்துறது எண்டு எங்கடை ஞானக்குட்டான் ஞானதேசிகன் சேர் முடியை பிய்ச்சு கொண்டதிலை மிச்ச சொச்சமாய் இருந்த அவரின்ர மயிரும் காணாமப் போட்டுது!

குணடனாய் இருந்தா குண்டெறியலாம் எண்டு யாரோ தப்பாச் சொல்லியிட்டாங்கள். குண்டெறியிறவனெல்லாம் குண்டனாய் இருக்கலாம் ஆனா குண்டன்கள் எல்லாரும் குண்டெறிய முடியாது எண்டு என்னைப் பார்தபிறகுதான் அவையளுக்கு விளங்கியிருக்கும். நானும் எதிர்பார்க்கேல்லை அது அப்பிடி நடக்கும் எண்டு! எறிஞ்ச குண்டு காத்திலை சுழலும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை! பின்னை அது என்னெண்டு முன்னாலை எறிய, போய்ப் பின்னாலை விழுந்தது எண்டும் எனக்குத் தெரியாது! நல்லவேளை பின்னாலை நிண்ட பெடியள் தப்பியிட்டாங்கள். ஆர்ரையும் காலிலை விழுந்திருந்தா..... முரளியின்ர டூஸ்ரா பந்து நான் உறிஞ்ச பட்சொட்டிலை இருந்துதான்அந்தாள் படிச்சதெண்டா நீங்கள் என்ன நம்பவாபோறியள்!

குண்டெறியிற ஆக்கள் ஜவலினும் எறியோணுமாம். என்னையும் எடுத்துப்போட்டாங்கள்! கிளீனர் காண்டி பயந்து கொஞ்ச நேரம் அந்த இடத்திற்கே வரேல்லை! ஜவலினிலை அவன்தான் கடைசியிலை சம்பியன்! ஆனா அவனுக்கு பீப்பயம்! வராதா பின்னை! நான் எறியிறது எங்கை போகுமம் எண்டு எனக்கே தெரியாத போது அவனுக்கும் அது எப்பிடித் தெரியும். பின்னாலை முன்னாலை நிக்கேக்கை வந்து ஏறியிட்டுது எண்டா??!! கடைசியிலை நான் எறிஞ்ச ஒண்டும் லாண்ட் பண்ணவே இல்லை!!!!

பெரிய அவமானம். சபாபதி இல்லம் கடைசி! ஒரு வருசம் இரண்டு வருசம் இல்லை தொடர்ந்து 3 தரம்!


வெறி வந்திட்டுது! ஹவுசுக்கு குறைஞ்சது ஒரு புள்ளியாவது பெற்றுக் குடுக்கிறதெண்டு! என்ன செய்யலாம்???!!!

றோட் ரேஸ்தான் நல்ல வழி! குறிச்ச நேரத்திலை ஓடிமுடிச்சா ஒரு புள்ளி கிடைக்கும். ஆனா அதுவும் லேசுப்பட்ட விசயம் இல்லை! 5 கிலோமீட்டரை 20 நிமிசத்திலை ஓடவேணும்.

கனக்க தூரம் ஓடுறது எண்டது எங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை! எத்தினை நாள்எத்தினை மைல் நாங்கள் சைக்கிளை மூசி மூசி உழக்கியிருப்பம். தூரமெண்டது பெரிய பிரச்சனையே இல்லை. ஆனா டைமுக்கை முடிக்கிறதெண்டா கொஞ்சம் கஸ்டந்தான்.

நான் றோட்றேசுக்கு பெயர் கொடுக்கேக்கை வகுப்பிலை பெரிய சிரிப்பலை! நாலெட்டு நடந்தாலே மூச்சு வாங்கிற பெடியன் றோட் ரேசிலை ஓடுறதெண்டா. ....
இன்னொரு அம்புலன்சுக்கும் சொல்லி வையுங்கோடா.... பெடியள் நக்கலுக்கு சொன்னவங்களோ அல்லது கரிசனையிலை சொன்னவங்களோ எனக்குத் தெரியாது.

நான் ஓடுறதெண்டு தீர்மானம் எடுத்திட்டன்.

தனிய ஒரு நாளும் ஓடேலாது. ஓடுறதெண்டா சோடி தேவை. பஞ்சிப் படேக்கை ஊக்குவிக்கவும் பயிற்சி எடுக்கவும் யாராவது தேவை!


மஞ்ஞாதான் உதுக்கு சரியான ஆள்! மயுரன் எண்ட பெயர் மஞ்ஞா எண்டு மாத்தினது யாரெண்டு தெரியாது! ஆனா மஞ்ஞா எல்லாத்துக்கும் ஓமெண்டு வாற ஆள் எண்டு எல்லாருக்கும் தெரியும்.

மஞ்ஞா அஞ்சு மணிக்கே வந்து வாசலிலை பெல் அடிக்கும். மஞ்ஞாவும் என்னைப்போலத்தான். அஞ்சு மணிக் கருக்கலிலை முகந்தெரியாது. ஆனா அவன் சிரிப்பான். மஞ்ஞான்ரை பல்லு என்ரையை மாதிரி காவிபடிஞ்ச பல்லுகள் இல்லை. இருட்டிலை சிரிச்சாலும் தெரியும்.

அவன் பெல் அடிக்கேக்கை தான் நான் எழும்புறது. வாயை மட்டும் அலம்பிப்போட்டு காற்சட்டை ரீசேட் போட்டுக் கொண்டு போறதுதான். அந்த காலத்திலை ரக் சூட் எண்டாலோ பம் சூ எண்டாலோ எங்களுக்கு தெரியாது.

எங்கடை கிரவுண்டிலை இருந்துதான் ஓடத் தொடங்குறது. காலைமை ஓடுறதும் ஒரு விறுவிறுப்புதான் பாருங்கோ! காலமை எண்டா ஓடேக்கை மம்மல் இருட்டிலும் நல்லா கண் தெியோணும் பாருங்கோ! கிடங்கு முடங்குகளிலை விழுந்தெழும்பாம மட்டுமில்லை காலங்காத்தாலை தெருவுக்கு கோலமிட்டு வைச்சிருக்கிற எங்கடை வைரவரின்ரை வாகனத்தின்ரை வாய்ப்பனிலை உழக்காம ஓடவுந்தான்!

கிரவுண்டிலை தொடங்கி அப்பிடியே கஸ்தூரியார் றோட்டை பிடிச்சு நாலவர் நோட்டாலை திரும்பி அப்பிடியே பிறவுண் ரோட் பிடிச்சு பேந்து கலட்டிச் சநிதியிலை இருந்து இராமநாதன் றோட்டாலை நாச்சிமார் கோயில் வந்து..பேந்து அப்பிடியே அரசடிபோய் சிவப்பிரகாசம் றோட்டை பிடிச்சு மானிப்பாய் றோட்டு வந்து ஓட்டு மடத்தாலை பழையபடி கிறவுண்டுக்கு வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு நிற்கோணும். இதுதான் முழு ரூட்டும்.

முதல் நாள் ஓட்டம் பாருங்கோ. பிறவுண் றோட்டிலேயே களைச்சிட்டுது. அப்பிடியே அரசடி றோட்டாலை திரும்பி வந்ததுதான். அடுத்தநாள் நாச்சிமார் கோயிலடி! மூண்டு நாளுக்கு பிறகுதான் முழு றவுண்டுமே ஒரே ஓட்டத்திலை ஓட முடிஞசுது. எவ்வளவு நேரத்திலை எண்டே கேக்கிறியள். சொன்னா வெக்கக்கேடு! ஒண்டரை மணித்தியாலம் பிடிச்சுது. உந்த தூரத்தை 20 நிமிசத்திலை ஓடுறதெண்டது கொஞ்சம் கஷ்டமான காரியம் போல தெரிந்தாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை.

முதல் இரண்டுநாளும் பிரச்சனை அவ்வளவு இல்லை. மூண்டாம் நாள் தான் அது தொடங்கினது. அண்டைக்கு எண்டு பார்த்து மஞ்ஞாவும் சுணங்கிப்போனான். நாங்கள் சிவப்பிரகாசம் வீதியை தொடேக்கை விடிஞ்சிட்டுது.

எங்கடை பெட்டையள் காலங்காத்தாலை எழும்பி வாசலிலை விளக்குமாத்து போட்டு கூட்டுமளவு முன்னேறியிருக்கும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை. அதுகள் கேற்றை திறந்து கொண்டு வர அதுக்குப் பின்னாலை அவையளின்ரை வீட்டுநாயளும் வெளியிலை வந்திடும்.

பேந்தென்ன கலைபாடுதான். அதுகள் உஞ்சு உஞ்சு எண்டு கூப்பிட்டாலும் அவையளின்ரை நாயள் எங்கடை குஞ்சுகளை புடுங்காம விடுறதில்லை எண்டு கலைச்ச கலையல்!!! அப்பப்பா! எங்களை ஒரு கோச்சும் அப்பிடி ரெயின் பண்ணி இருக்கேலாது.

ஒரு மாதிரி அந்த நாளும் வந்திட்டுது. டே மச்சான் களைச்சுதெண்டா வா வந்து அம்புலன்சிலை ஏறு எண்டு உவன் பேக்கரன் கூட வெறுப்பேத்தினான்.

வெறி வந்திட்டுது.

நாயளின்ரை ரெயினிங்.. பெட்டையளின்ரை சிரிப்பு... அவனின்ரை நக்கல்...

ஓட்டம் சொல்லி வேலையில்லை.

பெல் அடிக்க முந்தி வந்து சேந்திட்டம்.

சபாபதி ஹவுசுக்கு என்னாலை ஒரு புள்ளி.

அந்த முறை சபாபதி ஹவுஸ் கடைசியிலிருந்து கடைசிக்கு முன்னதாக முன்னேறியிருந்தது.










செவ்வாய், 4 மே, 2010

வாறியளே உதிலை ஒருக்காப் போட்டு வருவம்??!!!

என்ரை காதல் தோத்ததுக்கு உந்த குறுக்காலை போனவங்களும் ஒரு காரணம் எண்டா நீங்கள் நம்ப மாட்டியள். குறுக்காலை போவார் எண்டு யாரைச் சொல்லுறது எண்ட குழப்பம் உங்களுக்கு வேணுமானால் இருக்கலாம். எனக்கு இல்லை. உந்த கொன்வே எண்ட சாமானைப் போட்டு எங்கடை யாழ்ப்பாணத்திலை இருக்கிற பாதையளை கால நேர கணக்கில்லாம மூடி வைச்சிருந்த புண்ணிவான்களைத்தான் சொல்லுறன். கொன்வே எண்ட உடனை வவுனியாவுக்கு போன பஸ் கொன்வே உங்களுக்கு நினைவு வரலாம். இது அதில்லை பாருங்கோ. அதுக்கு முன்னம் அவங்கள் தங்கடை வாகனம் போறதுக்கு வைச்சிருந்தது.

எனக்கும் கொன்வே எண்டா என்னெண்டு ஒரு இழவும் தெரியாது. அம்மா சொன்னவதான் உவங்கள் பாதையை மூடி விளையாடுவாங்கள் கவனம் எண்டு. உவங்கள் தான் முகமாலை பாதையை மூடிப் போட்டாங்களே! நானே பிளைட்டிலைதானே வந்தனான். பேந்தென்ன பாதை மூடுற விசர்க கதையை மனிசி கதைக்குது எண்டு கோபந்தான் வந்தது.

உன்னாணை விசயம் உண்மைதான் பாருங்கோ! எனக்குத்தான் விசயம் விளங்கேல்லை. நானும் கன காலம் யாழ்ப்பாணப் பக்கம் புழக்கத்திலை இருக்கேல்லைத் தானே! எங்கடை காலத்திலை எண்டா முந்தி ரவுண்டப்பு தலையாட்டி எண்டு சில்லறை விசயங்கள் தான் இருந்தது.

ரவுண்டப் எண்டா எங்களுக்கு சந்தோசம்தான். போவ ஏலா எண்டு கொச்சையிலை கதைக்கிற அவனுக்கு உச்சிப்போட்டு நாள்கள் ரியுசனுக்கு போடுவம் பாருங்கோ! அவன் ஜொப் ஐடியா (JOB ID) எண்டு கேட்டா ஆட்டுறதுதானே தலையை. அப்பிடி அவன் வாங்கிப் பார்த்தாலும் அவனுக்கு இங்கிலிஸ் வாசிக்க தெரியாது எண்டு எங்களுக்கு தெரியும். பேந்தென்ன அவன் ஹரி யன்ன யன்ன எண்டா நாங்க் பண்டை (BUND) கடந்து போறதுதான்.

தற்செயலா பிடிபட்டு ரவுண்டப்புக்குள்ள மாட்டுப்பட்டாலும் அது எங்களுக்கு பெரிய விசயம் இல்லை. யாராவது வாற தலையாட்டி மாறிக்கீறி ஆட்டிப்போட்டா அவங்கள் கொண்டுபோய் போடுற போடிலை குந்தியிருந்து குசு விட்டாக்கூட நோகும் எண்டு சொல்லுறவைதான். ஆனா எங்கைளைப் பார்த்து தலையை ஆட்டினா தலையாட்டிக்குத்தான் விசர் எண்டு அவங்களே சொல்லுவாங்கள். முயல் பிடிக்கிற நாயெண்டா மூஞ்சியிலை பார்க்கவே தெரியும் பாருங்கோ!




ரவுண்டப் எண்டா அவங்கள் காலமையே தொடங்கியிடுவாங்கள். போட்ட உடுப்போடை மாடு சாய்ச்ச மாதிரி எல்லாரையும் கோயிலடிக்கு கொண்டு வந்து போடுவாங்கள். ஞாயிற்றுக் கிழமைதான் ரவுண்டப் வழமையா நடக்கிறது. உப்பிடித்தான் நைட்டியோடை வந்த நிர்மலா அக்காவை பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் அண்ணை பார்த்து.. அதுவே லவ்வாகி.. ஊரைவிட்டு ஓடுறளவு வந்ததெண்டா ரவுண்டப்பின்ரை பவர் உங்களுக்கு விளங்கியிருக்கும். மூஞ்சை கழுவாம பொம்புளையளைப் பார்த்தா பேயை பார்த்த மாதிரி இருக்கும் எண்டு சொல்லுறவை ஆனா பாருங்கோ நிர்மலா அக்காவை முகம் கழுவாம பார்த்தாக் கூட கிளிப்பிள்ளை மாதிரி நல்ல வடிவு. ஆனா பாவம் நிர்மலா அக்காவின்ரை தம்பிக்கு அக்காவின்ரை வடிவுமில்லை துணிவும் இல்லை. அவனுக்கு இப்ப கூட பிடிச்சு ஒழுங்கா ஒண்டுக்கடிக்கத் தெரியாதெண்டு வினாசித்தம்பி வாத்தியார் சொல்லுறவர். அது உண்மையா இருக்கலாம். ஏனெண்டா அண்டைக்கு தலையாட்டி மாறி பிழையா தலையாட்டி அவனுக்கு கொண்டுபோய்ப் போட்ட பூசையிலை மூத்திரத்தோடை இரத்தம் வந்ததாய் அப்ப கதைச்சவையள்தான்.

ஆனா எங்களுக்கு உந்த கொன்வே தெரியாது பாருங்கோ! அண்டைக்கும் அப்பிடித்தான் தின்னவேலிச் சந்திக்கு இங்காலை ஒரு அலுவலாய் வந்தனான். தாலியை கட்டுவார் கொன்வேயை போட்டுட்டாங்கள். றோட்டுக்கு அங்காலையும் போகவிடானாம். இஞ்சாலையும் வர விடானாம். ஆனா றோட்டாலை ஒரு வாகனமும் போகவும் இல்லை. எப்ப எடா கொன்வேயை திறப்பான் எண்டு கேட்டா அதுவும் தெரியாதாம். எப்ப போடுவான் எண்டதும் தெரியாதாம். மூண்டு மணித்தியாலம் ஆச்சுப் பாருங்கோ சந்தியை கடந்து போக!!!

காதலுக்கும் ஆறாம் நம்பருக்கும் என்ன தொடர்பெண்டு எனக்குத் தெரியாது. சாத்திரத்தை நான் நம்புறதும் இல்லை. ஆனா நீங்கள் ஆறாம் நம்பரோ எண்டு கேட்டு உதுகள் ஒருமாதிரிச் சிரிக்க மனசுக்குள்ளை குறுகுறு எண்டு அரிக்கிறதுதான்.

ஆனாப் பாருங்கோ காதலிக்கிறதுக்கு என்ன வேணும் எண்டு கேட்டா ஒரு பெண் மட்டும் போதும் எண்டுதான் நான் சொல்லுறனான். ஆனா என்னைக் கண்டா என்ரை பெடியளுக்கு பயம். இருக்காதே பின்னை. யாரையாவது பார்த்துவிட்டு உது யாரடா எண்டாலே பயம் பிடிச்சிடும். உவங்களைப்போலை அந்தப் பிள்ளைக்கு அண்ணன் தம்பி இருக்கோ? அவன் அடிதடிக் காரரோ ? எண்டெல்லாம் விசாரிக்குகொண்டுதான் இறங்க வேணும் எண்டா பேசாம பேசியே கலியாணத்தை செய்யலாமே? பேந்தென்ன அதிலை திறில் வேண்டிக்கிடக்கு!!!!





அண்டைக்கு ஜீவன்தான் மாட்டுப் பட்டது. வாவன் ஜீவன் உதிலை ஒருக்காப் போட்டு வருவம் எண்டு சொல்லேக்கை ஜிவனுக்கு விசயம் தெரியாது. விசயத்தை முதலே சொல்ல எனக்கென்ன விசரே? ஜீவனின்ரை மோட்டசைக்கிள் வல்லை காற்றை கிழிச்சுக் கொண்டு ஓடும். விசயத்தை முதலிலேயே சொன்னா ஆள் வறுகியிடும். போகவிட்டுச் சொல்லுவம் எண்டு விட்டிட்டன்.


வெளியின்ரை நடுவிலை மறிச்சுபோட்டாங்கள். எல்லா வாகனமும் நிண்டிட்டுது. முனியப்பரை கும்பிட எல்லா வாகனமும் நிக்கிறது வழமைதான். ஆனா அண்டைக்கு கொண்வே கடக்கும் வரை நிப்பாட்டி வைச்சிருந்த வாகனங்கள்தான் கோயிலடியிலை நிண்டது. இனி யெப்ப கொன்வே திறப்பான் எப்ப போகலாம் எண்டது இந்த முனியப்பருக்குத்தான் வெளிச்சம். அவருக்கும் அது தெரியுமோ தெரியாதோ?

ஜீவன் எங்கை போறம் எண்டு கேட்டான். அவன் இவ்வளவு நேரமும் ஜனா வீட்டை அல்லது சிவம் வீட்டை போறதெண்டுதான் நினைச்சிருந்தவன். ஜனா வீட்டையெண்டா செல்லச்சன்னிதி பாதையிலை போகவேணும். சிவம் வீட்டை எண்டா வல்லிபுரக்கோயில் பாதையிலை போகவேணும். செல்லச் சந்நிதியையும் வல்லிபுரத்தையும் விட்டா எங்களுக்கு உங்காலை ஒரு பக்கமும் தெரியாது.

நான் ”இல்லையப்பா அது வேறை வீட்டை போறம்” எண்டன். ”என்ன புதுசாத் தொடங்கியிட்டீரோ?” எண்டான். உவங்களுக்கு ஒரு நக்கல் பாருங்கோ. நான் ஆரைப் பார்த்தாலும் அதுக்கு ஒரு வருசத்துக்குள்ள வேறை யாரோடாவது கலியாணம் ஆயிடும். அப்பிடி ஒரு ராசி! அப்ப இன்னொண்டைத்தானே பார்க்கோணும். அது உவையளுக்கு நக்காலா கிடக்கு.

“என்ன பெயர்?”

சொன்னன்.

“எந்த ஊர்?”

“...எண்டு தான் நினைக்கிறன் வடிவா தெரியாது.”

“அதிலை எவ்விடத்திலை?”

எனக்கு விசர்தான் வந்தது. அந்த ஊரை இப்பத்தான் கேள்விப்படுறன். அதுக்கு எப்பிடி போறதெண்ட வழியே தெரியாது! அதுக்குள்ள பேந்து எவிவிடத்திலை எண்டா என்ன செய்யுறது?


“அவையின்ரை அப்பாவின்ரை பெயர் என்ன?”

“தெரியாது”

ஜீவன் கோபப்பட்டதுக்கு காரணம் என்ரை பதிலா இருக்க முடியாது. கனநேரம் வெயிலுக்கை நிண்டதுதான் காரணம் எண்டு நினைக்கிறன்.

ஐஸ்கீறீம் வண்டில்காரன் விற்றுக்கொண்டிருந்தான்.

வெய்யிலுக்கு குடிச்சா நல்லாத்தான் இருக்கும். நாங்கள் வரேக்கை ஒரு ஒன்பது மணியிருக்கும். அப்பத்தான் கொன்வேக்கு பாதை பூட்டினதா சொன்னவை. இனி இரண்டு மூன்று மணித்தியாலம் எடுக்கும்.

ஐஸ்கிறீம் முடிஞ்சுதாம். பின்னை அதிலை வந்து மறிபட்டு நிக்கிற சனம் எல்லாம் வேண்டினா முடியாதே? ஜூஸ்தான் இருக்கெண்டான். சரிதாவன் எண்டு வாங்கிக் குடிசாச்சு.

தண்ணியை குடிச்சா போக வேண்டியும் வருந்தானே? உந்தச் சனத்துக்கை எங்கைபோறது? தூரப்போகவும் பயமா இருந்தது. கீழை கிடக்கிறதுதுகள் காலுக்கை வெடிச்சு சிதறிப்போச்செண்டா.......அடக்கிக்கொண்டேன்.


கொன்வே திறக்க 11 30 மணியாச்சு


............................................................................

இதுதான் இந்த ஊர்.
ஏத்திக்கொண்டு வந்த ஜீவன் சொன்னான்.
ம் பிள்ளையைபோலை ஊரும் வடிவாத்தான் இருக்கு!

அப்பான்ரை பேரும் தெரியாம வீட்டுக் குறிப்பும் தெரியுயாம என்னெண்டு வீடு கண்டுபிடிக்கிறது?

பொறுங்கோ ஜீவன் இப்ப அது அவசரமில்லை!

“அப்ப எது அவசரம்? ”ஜீவனுக்கு கொஞ்சம் கோபம் வந்திருக்க வேணும்! அதுக்கு நானென்ன செய்யுறது. அப்பவே வேறை அவசரம் எனக்கு! போதாக்குறைக்கு ஜூஸ் வேறை குடிச்சாச்சு! முட்டிப் போச்சு!

நிப்பாட்டுங்கோ வண்டியை. நான் பெஞ்சிட்டு வாறன்.

“எங்கை உதிலையோ?” ஜீவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது!

பெரிய மரமெண்டா அது வசதி பாருங்கோ! மரத்தின்ரை இடுக்குக்குள்ளை அல்லது கோறைக்கை அடிச்சிட்டு வரலாம்!

தற்செயலா உந்த நேரத்திலை அவையள் வந்தா?

ஜீவனின் பயம் நியாயமானது எண்டாலும் எந்த 12 மணி வெயிலுக்கை யார் வரப்போறா?

யாரோ வருகினமப்பா - பாதி வேலை நடந்துகொண்டிருக்கேககை ஜீவன் கத்தினான். பெய்யேக்கை கத்தினா அது நிண்டிடும். அதுக்குதான் உவர் வேலை காட்டுறார்.

எதுக்கும் எண்டு தலை திருப்பிப் பார்த்தன்.

ஓம் பாருங்கோ யாரோ பொம்பிளைப் பிள்ளையள் கூட்டமா வந்து கொண்டிருந்தினம். ஐயோ யாரோ பொம்பிளைப் பி்ள்ளையள் இல்லை. அது அநதப் பிள்ளையப்பா.
அவசரத்திலை இழுத்த இழுப்பிலை சிப்புக்குள் சிக்கிக் கொண்டது. என்ரை ஐயோ! வேதனையில் உயிர் போனது.

வயிறு இன்னமும் முட்டி நொந்து கொண்டிருந்தது.

......................................................................................................................

கனக்க கதைச்சுக் கொண்டு நில்லாதையும் பின்னேரமும் கொன்வே போடுவான். ஜீவன் சொன்னான்.

கொன்வேயோ?

நாங்கள் இப்பவே வெளிக்கிடுவம்.


அந்தப் பிள்ளைக்கும் கெதியா நிச்சயமாகிவிட்டது. என்ரை ராசி நல்லாத்தான் வேலைசெய்துகொண்டிருக்கு!

.....................

இந்தப் பிள்ளை யாரடா?

ஐயோ ஆளை விடு சாமி... ஜீவன் ஓடியே போய்விட்டான்.

இப்ப கொன்வே இல்லையாம்!

வாறியளே உதிலை ஒருக்கா போட்டு வருவம்????



















வியாழன், 8 ஏப்ரல், 2010

புகைச்சல்! புகைச்சல்!

முதன் முதல் செய்யிறது எண்டா ஒரு பதகளிப்பு இருக்கத்தான் செய்யும். அது எத்தினை தரம் கண்டு கேட்டு உண்டு உயிர்த்திருந்தாலும் அது அப்பிடித்தான்.

மூண்டு வருசம் மட்டும் தேவையில்லை எண்டதாலை நானும் பெரிசா கவனிக்கவில்லை. கண்ணை மூடித் திறக்க முன்னம் மூன்று வருசம் முடிஞ்சு போகும் எண்டு யார் கண்டது! காலம் போற போக்கைப் பாருங்கோ!

அதுவும் ஒரு வகையிலை நல்லதுதான். எங்களுக்கு மேலதிக செலவெண்டாலும் அதாலை மற்றைவையளுக்கு நன்மை எண்டா அதைப் பற்றி கவலைப் படாம வேலையை செய்து போட வேணும்.

உதுக்காகவே நான் யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்புக்கு வரவேண்டியதாய்ப் போச்சு! குலுக்கிறது வேணுமெண்டா சினிமாவிலை பார்க்கேக்கை ரசிக்க கூடியதா இருக்கலாம். ஆனா வண்டி குலுக்கினா என்ன நடக்கும் எண்டு வன்னி றோட்டிலை போய்ப் பார்த்தாக்களுக்கு விளங்கும்.
வண்டி குலுங்கினா வண்டியும் நோகும் எண்டது வெளிப்படை உண்மை!



காலைமை செய்தா சுகம் எண்டு மனசுக்குள்ளை ஒரு பட்சி சொன்னதாலை வெள்ளணவே வெளிக்கிட்டன். பதிவுச் சான்றிதழும் கொண்டுபோகவேணுமாம். நல்ல வேளை உவன் சுதன் முதலே சொல்லியிட்டான். இல்லாட்டா அதை எடுக்க திரும்பி வந்திருக்கவேணும்.

செய்துகொண்டு போக எல்லாரும் லைனிலை நிண்டிச்சினம். என்ரை மட்டும்தான் அதுக்கை புதுசு. மற்றதெல்லாம் ஓடிக் களைச்ச சாமான்கள். அவையளும் வென்று காட்டுறம் எண்டு வந்து நிண்டதை பார்க்கத்தான் பெரும் சிரிப்பு!

எனக்கு முன்னாலை நிண்டதின்ரை சொந்தக்காரி ஒரு டொக்டர் போலை கிடந்துது. எங்கடை அம்மம்மாவின்ரை வயதிருக்கும். அப்ப அவ சொந்தமா வைச்சிருக்கிறதும் அவவைவிட வயசா இருந்தா என்ன அதிலை பிழை? ஆனா அது இந்த போட்டி, பரீட்சையிலை எல்லாம் தேறுமா எண்டது எனக்கும் சந்தேகம்தான்.






என்ரை புதுசை வைச்சுக் கொண்டு நானே பயந்துகொண்டிருக்க, அவா அந்த பழசோடை என்னென்று தைரியமாய் எல்லாம் வெல்லுவம் என்ற பாவனையிலை நிண்டாவோ தெரியாது.

அவவின்ரை முறை. தன்ரையோடை உள்ளுக்கை போனா. முக்கிறமாதிரி சத்தம் கேட்டது. ஒரே புகை மயம். பருப்பை திண்டிட்டு எங்கடை குசுமுட்டி விட்டது மாதிரி மணம் வேறை. மலிவானது எண்டதாலை மனிசி மாற்றி விட்டுட்டுதோ என்று எனக்கு ஒரே சந்தேகம். அது அதுக் கெண்டடிருக்கிறதிலை அதை அதை விடோணும் எண்டு ஒருதருஞ் சொல்லிக்குடுக்கேல்லை போலை!

நிச்சயமாய் அது பெயில்தான். அவ என்ன நினைச்சாவோ தெரியாது. விறுவிறு எண்டு கீழை இறங்கி அந்தப் பொடியனின்ரை கைக்குள்ளை ஏதோ வைச்சா. பிறகென்ன அந்தப் புகைவண்டியும் பாஸ்தான்.

கொழும்பு மாநகரில் ஓடும் வாகனங்கள் புகைக்காக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். வானொலி செய்தி சொல்லிக் கொண்டிருந்தது.

இச் இச் இச் - சுவர் பல்லிக்கும் விசர் பிடிச்சிட்டுது.


வாழ்க இலங்கை மணித்திருநாடு!

என்ரை வண்டியும் பாஸ்!





சனி, 23 ஜனவரி, 2010

கவலையில் பங்கெடுத்தல்

தரித்திரம். மூதேவி...( இன்னும் இரண்டு கெட்ட வார்த்தைகளுடன்) சனியன் நீ விழுந்து சாகிறதுக்கு என்ரை வாகனமே அம்பிட்டது? இப்படி பேசியிருக்கலாம். ஆனால் அதற்கான காலம் அவகாசம் இருக்கவில்லை. அப்பிடிப் பேசுவது சரியோ எண்டும் தெரியவில்லை. ஆனால் எல்லாரும் அப்பிடி பேசுறவைதானே.


அதுக்கும் என்ன பிரச்சனையோ தெரியாது. வீட்டை அம்மா பேசியிருக்கலாம். தண்டச்சோறு என்று தகப்பன் திட்டியிருக்கலாம். அண்ணன்காரன் அல்லது தம்பிக் காரன் எதையாவது புடுங்கிக் கொண்டு போயிருக்கலாம். அக்காக் காறி அல்லது தங்கச்சி எதுக்காவது திட்டியிருக்கலாம். அல்லது தங்கச்சியின் பிரண்ட்ஸ்க்கு கடிதம் கொடுத்து பிடிபட்டு வீட்டிலை தலை காட்டேலாம றோட்டிலை நிண்டிருக்கலாம்.

ஆக்களுக்கு முன்னாலை கடி வாங்கி மானம் போயிருக்கலாம். அல்லது இவர்ரை அது சின்னன் எண்டு யாராவது இங்கிதம் தெரியாதது ஆட்களுக்கு முன்னாலை போட்டுடைத்து இருக்கலாம்.

அல்லாட்டி பக்கத்து வீட்டுப் பெட்டையை சைட் அடிக்க இரவுதான் நல்ல நேரம் எண்டு நினைச்சிருக்கலாம். அல்லது துவக்கோடை மதிலுக்கை நிண்ட ஆமிக்காரனை கண்டு பயந்து ஓடிவந்திருக்கலாம்.

வீட்டு யோசனையிலை நிண்டிருக்கலாம். இரவு சாப்பாடு கிடைக்காம பசி மயக்கத்திலை சாப்பாடு தேடி ஓடியிருக்கலாம். இல்லாட்டா பக்கத்துவீட்டிலை நிண்டவவின்ர சிக்னலை கண்டிட்டு அவசரத்திரல பாஞ்சிருக்கலாம்.





என்னவோ தெரியாது திடீரெண்டு என்ரை மோட்ட சைக்கிளுக்கிள்ளை அது பாய்ந்திட்டுது. அது தற்கொலை முயற்சி எண்டும் சொல்லமாட்டன். தப்பி வந்து விழுந்தது எண்டும் சொல்ல மாட்டன். அது தற்கொலைத் தாக்குதலாகவும் இருக்கமுடியாது. ஏனெண்டா அதுக்கும் என்க்கும் முன்விரோதம் இல்லை. அது விரும்பி சாப்பிடும் சாப்பாடு களை நான் விரும்பிச் சாப்பிடுவதில்லை. எந்த விதத்திலும் அதின்ர வழியிலை நானோ என்ரை வழியிலை அது வோ இதுக்கு முந்தி குறுக்கிட்டதில்லை.

இரவு நேரம். எனது வாகனத்தின் விள்க்கு வெளிச்சம் பண்களில் பட்டதில் கண்கள் மின்னியது. பூனைக் கண் பூனைக் கண் எண்டு சொல்லிக்கொண்டு றோட்டு முழுக்க பதிச்சு வைச்ச கல்லு மாதிரியே அதுவும் மினுங்கியது. இனிப் பூனைக்கண் எண்டு சொல்லுறதை மாத்தவேணும்.

மினுங்கின கண்ணிலை தெரிந்தது பயமா? வெறியா? அப்பாவித்தனமா எனக்குத் தெரியவில்லை.

நாய் சில்லுக்குள் குதித்துவிட்டது. நான் இறுக்கி அடித்த ஹோண் சத்தம் சங்கூதினமாதிரி ஊரை எழுப்பிவிட்டது.

வாள் எண்டு அது கத்தின சத்ததிலை நான் கத்தவேண்டிய ஐயோ எண்டது எனக்கு மறந்துபோச்சு. சில கணப்போழுதுகள் நிலத்தை முகம் முத்தமிடமுன் இழுபடடுச் சென்ற சில மீட்டர் தூரம் பல கிலோ மீட்டர்கள் மாதிரி தோன்றியது.

அண்ணை வாங்கோ தூக்குங்கோ...சொன்னபடி நிறையபேர் ஒடி வந்தனர். அட இரவு 9 மணிக்கும் எங்கடை சனங்கள் அலேட்டாத் தான் இருக்குது.

மொக்கத உணே? வேலிக்கால் நிண்ட ஆமிக்காரனும் ஓடிவந்தான்.

என்னைத் தூக்காதையுங்கோடா மோட்ட சைக்கிளை நிமுத்துங்கோ! பெற்றோல் வேற வெளியிலை ஓடப்போது...பின்னை பெற்றோல் விக்கிற விலையிலை.

அண்ணை சைக்கிளை நிமித்திப்போட்டம் நீங்கள் எழும்புங்கோ.

எங்கையப்பன் அந்த நாய்? எழும்பியவுடன் கேட்டேன்.

அந்தச் சனியன் ஓடியிட்டுது.

“பாவம் அதுக்கும் காயம் கீயமோ தெரியாது. ..”

பெடியனுக்கு அடிச்ச அடியிலை மூளை கலங்கியிட்டுது. ஆசுபத்திரிக்கு ஏத்துங்கோடா.... நின்ற வயசானதொண்டு சொன்னது.

இல்லையில்லை. சிராய்ப்பு காயந்தான். நான் வாறன்.

நாய்க்கு ஏதும் காயமோ?

நீங்கள் சொல்லுங்கோ எனக்கு விசர் பிடிச்சிட்டுதே?